
இந்த விஞ்ஞான கேள்வி பதில் நூலும் இவ்வரிசையில் வர இருக்கும் இன்னபிற பன்னிரண்டு நூல்களும் தமிழில் எழுத என்னைத் தூண்டியது ஆயிஷாதான். இந்த நூலுக்குள் நுழையும் முன்னர் என் ஆயிஷாவை தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் இந்த புத்தகமெங்கும் வார்த்தைகளாக வாழ்பவள் அவள்தான். உங்களிடம் சொல்வதில் என்ன இருக்கிறது? இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நொடியில் என் விழிகள் கனத்துப் போகுமாறு கண்ணீர் ஆயிஷாவின் கதையை எழுதிக்கொண்டிருக்கும் ஒருத்திக்கும் இடையில் தான் எத்தனை வித்தியாசம்? என் ஆயிஷாவை நினைக்கும் போது மட்டும் இப்படிக் குழந்தை மாதிரி, துக்கம் கொப்பளிக்க அழ நேர்கிறது எனக்கு.
எனக்கு முதன் முதலில் தெரியவந்த ஆயிஷாவுக்கு 15 வயது. நான் அறிவியல் விஞ்ஞானம் ஆசிரியையாக பணியாற்றிய ஒரு கிறிஸ்த்துவப் பள்ளியில் பத்தாம் வகுப்பு - பி பிரிவில் ஐம்பத்தாறு மாணவிகளில் ஒருத்தி. அப்பள்ளி மாணவியர் விடுதியின் காப்பாள யுவதிகளில் ஒருத்தியாக அங்கேயே தங்கியிருந்த எனக்கு சற்றேறக்குறைய ஒரு செக்கு மாட்டு வாழ்க்கை பழகிப் போயிருந்தது. நாங்கள் எட்டு பேர் அவ்விதம் காப்பாள யுவதிகளாக நியமிக்கப்பட்டிருந்தோம். திருமணமாவதன் மூலம் இந்தச் சுழல் வாழ்விலிருந்து தப்புவோர், அவர்களுக்குப் பதிலாய் வரும் புதியோர் பிறகு தங்கள் திருமணத்திற்காகக் காத்திருக்கத் தொடங்கும் அப்பணியிடத்தில் சற்றேறக் குறைய நிரந்தர யுவதிகளாக நானும் ஆஸ்துமாக்காரி ஒருத்தியும் திருமணமாகாமல் தங்கிப் போனோம்.
நீண்ட பகலும் நிம்மதியற்ற இரவுகளும் என்னைத் தின்று கொண்டிருந்த அந்த நாட்களில் எனக்கு அறிமுகமானாள் அவள். அதிகம் கவர்கிறவிதமில்லை ஆயிஷா . பற்கள் துருத்தியபடி முகத்தில் வந்து விழுகிற கேசத்தைப் பற்றிய அக்கறையின்றி நாலாவது வரிசையில் குச்சியாக அமர்ந்திருக்கும் ஒருத்தி ஆசிரியையின் அபிமானத்தைப் பெற வாய்ப்பில்லை. தவிர நான் அவர்களது வகுப்பாசிரியை இல்லை. வருகைப் பதிவேட்டை சரிசெய்யவும் ஒவ்வொரு மாணவியையும் நெருக்கமாக அறியவும் வாய்ப்பு இல்லை. ஆகையால் முதலில் எனக்கு ஆயிஷா யாரோ ஒருத்தி.
முதன் முதலில் அவளை அறிய நேர்ந்த சந்தர்ப்பத்தை நினைக்கிறேன். எனக்கு சிலிர்க்கிறது. பல ஆண்டுகளாக ஒரு வகுப்பில் ஒரு குறிப்பிட்ட பாடத் தையே தொடர்ந்து போதிக்கும் எல்லா ஆசிரியைகளையும் போலவே நானும் ஒரு எந்திரமாய் ஆகிப்போயிருந்தேன். சில வேளைகளில் சில பாடங்களை நடத்தினோமோ என்கிற நியாபகமே இல்லாமல் கூட நடத்தியிருக்கிறேன். இத்தனை வருடத்தில் பத்தாம் வகுப்பு அறிவியல் விஞ்ஞானம் புத்தகத்தில் என்ன பெரிதாக மாறிவிட்டது? காலை யில் எழுந்து பல் துலக்குவதை உற்சாகத் தோடா செய்கிறோம்? எப்போதாவது புதிய பிரஷ் அல்லது பேஸ்ட் இங்கே அதுவும் இல்லை . அதே ஓம்ஸ் விதி. அதே செல் பிரிதல். புதிதாக தெரிந்து கொள்ளும் ஆர்வமற்று ஒரு இயந்திரமாய் கிரீச்சிட்டுக் கொண்டிருந்த என்னை என் முகத்தில் கேள்விகளால் ஓங்கி அறைந்தாள் ஆயிஷா.
அன்று காந்தவியல் குறித்து பாடம். பூமி எப்படி ஒரு காந்தமாக உள்ளதென விளக்கிக் கொண்டிருந்தேன். ஒரு காந்தம் அதுவும் செவ்வக வடிவக் காந்தம். அதைக் கையில் உயர்த்திக் காட்டினேன். சிரமமே இல்லை. காந்தத்தின் வடநோக்கு அம்சம் குறித்து வழக்கமான எந்திரத்தனத்துடன் யாவரையும் உறங்க வைத்துவிடும் முடிவுறா எண் என்று வெச்சிட்டா ....?'
'ரொம்ப சிம்பிள்மா..... முடிவுறா எண்ணிக்கையில் காந்தம் கிடைக்கும்.
மீண்டும் நிசப்தம், லேசாக வியர்க் கிறது, அவளுக்கு. வகுப்பு உற்சாகத்தில் ஒரு போட்டியை ரசிப்பது போல் உணர்ந்தேன். உடனே 'உட்காரு' என்றேன். பின் நடந்து கொண்டிருந்தேன். ஏதேதோ பாவனையாகப் பேசிக் கொண்டு குறுக்கு நெடுக்காக மணி அடிக்கும் வரை அலைந்து விட்டு வகுப்பிலிருந்து வெட்கமில்லாமல் மிடுக்காக வெளியேறினேன்.
அடுத்த வகுப்பறையை தாண்டியிருக்க மாட்டேன். கூடவே வந்தது நிழல். மிஸ் ... ப்ளீஸ் , மிஸ். ஒரே ஒரு நிமிசம் மிஸ்...' அப்படி சொல்லும் போது அவள் முகத்தைப் பார்க்க வேண்டும் நீங்கள், அதற்கு மேலும் புறக்கணிக்க முடியவே முடியாது.
'என்ன... சொல்லு'
'காந்தம்.... பத்திதான் மிஸ்'
'சொல்லும்மா.. டயம் ஆச்சில்ல?'
'முடிவுறா எண்ணிக்கையிலான காந்தங்கள் ஒரே நேர் கோட்டில் வெச்சா... எதிர் துருவங்கள் கவரும் அதன் இயல்பு என்ன ஆகும்?'
.........'
'ஒரு காந்தத்தின் வடக்கு மறு காந்தத்தின் தெற்கை இழுக்கும். ஆனால் இழுபடும் காந்தத்தின் வடக்கே அடுத்துள்ள காந்தம் ஏற்கனவே இழுத்து கிட்டிருக்கும் இல்லையா.....? மிஸ்'
'ஆமா... அதுக்கென்னன்ற...?
'என் சந்தேகமே அங்கதான் இருக்கு ... எல்லா காந்தங்களின் கவர்தி - றனும் ஒன்றெனக் கொண்டால் அவை ஒட்டிக்கொள்ள வாய்ப்பே இல்லயே.. எப்புறமும் நகராமல் அப்படியே தானே இருக்கும்.''
''........'
'ஏன் நாம் இந்த பிரபஞ்சம் முடிவுறா எண்ணிக்கையிலான காந்தங்களை நேர்க்கோட்டில் வைத்தது போல் அமைக்கப்பட்டதா வெச்சிக்கக் கூடாது? அந்த கோணத்தில் பூமரங்கர காந்தத்த ஆராயலாம் இல்லயா?'
பதிமூன்று வருட பள்ளி வாழ்க்கை , பின் மூன்றாண்டு இயற்பியல் பல்கலைக்கழகத்தில், இப்படியொரு கேள்வியை நான் கேட்டுக கொண்டதாக நினைவில்லை. எங்கோ படித்ததாக நியாபகம்' என்றேன். ஏதாவது சொல்ல வேண்டுமே.
"The truth of Magnets, வெப்ரோட ஸ்டூடண்ட் கிங்லீங் எழுதியது.... அருமையா இருக்கு. படிக்கறீங்களா மிஸ்..'
'இந்த புக்கெல்லாம் நீ படிக்கிறாயா?' அவ்வளவுதான் என் ஆயிஷா கிடைத்துவிட்டாள். அந்த அதிர்ச்சியில் இருந்து இன்றுவரை மீள முடிய வில்லை. அறை வாங்கியவளைப் போல நடந்தேன்.
இப்போது சொல்கிறேன். அந்த நிமிடத்திலேயே ஆயிஷா என்னை முழுசாக வென்றுவிட்டாள். எப்பேர்ப்பட்ட சந்தர்ப்பத்திலும் அதன்பின் அவளை நான் வெறுத்ததே இல்லை. ஒரு செக்கு மாட்டிற்கு இதைவிட அமர்க்களமாய் யார்தான் சூடு போட முடியும்?
இரவில் புத்தகத்தை எனது விடுதி அறையில் புரட்டிய போது மேலும் பல அதிர்ச்சிகள். முதலில் அது மாவட்ட மைய நூலகத்தின் முத்திரை பெற்றிருந்தது. அது திருடப்பட்டிருக்க வேண்டும். பின் அதில் ஆயிஷா
அடிக்கோடிட்டிருந்த முறை. ஆங்காங்கே காணப்பட்ட அடிக்குறிப் புகள். எல்லாமே அவளைக் குறித்த எனது எண்ணத்திற்கு மேலும் மேலும் ஆச்சரியக்குறிகளை சுட்டிக் கொண்டிருந்தன. ஆயிஷா ஒரு குழந்தை. இல்லை, அவள் யாரோ, மனுஷி கூட இல்லை . வேறு ஏதோ பிறவி. கடவுளே...... நான் ஒரு நிமிடம் கூட தூங்கவில்லை .
விடுதியில் காலை வேளையில் அவளது வகுப்புப் பெண்களை அழைத்துப் பேச துடித்தேன். அவளைப் பற்றி அறிய வேண்டும். இத்தனை நாட்கள் அவளை அறியாது போனது ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தியிருந்தது. புத்தக மோ என் அறையே கனத்துப் போகும்படி என்னை திடுக்கிட வைத்துக்கொண்டிருந்தது. வேலைகள் ஒடவில்லை. இத்தனைக்கும் எல்லாவற் றையும் படிக்கவில்லை. அப்பெண் அடிக்கோடிட்டிருந்த வரிகளையும் அவளது அடிக்குறிப்புகளையும் படித்து விழி பிதுங்கி போயிருந்தேன்.
முதல் பாட வேளையில் வகுப்பேதும் இன்றி ஆசிரியர் ஓய்வறையில் அமர்ந்து இருந்தேன். கையில் புத்தகம். ஓய்வறையில் ஆசிரியைகள் புதிய புடவை டிசைன் களைப் பற்றி நீண்ட விவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். சரோஜினிக்கும் ரெஜினா மிஸ்க்கும் இதேதான் வேலை. இல்லையென்றால் நடிகைகளின் வித்தியாசங்கள். ஒரு நாள் புருவம், மறுநாள் மச்சம், இப்படிப் பேசிப் பேசிக் களைத்து பாடம் நடத்தவேண்டிய வகுப்பறையில் ஓய்வெடுப் பார்கள். ஆரம்பத்தில் இது எரிச்சலூட்டுவதாக இருந்தது. பிறகு மரத்துப் போனது. இப்போது புதியவ ளாகி இருக்கிறேன். அவர்களைப் பார்த்த எனக்கு அளவற்ற அருவருப்பு உண்டாகியிருந்தது.
திடீரென்று மாணவியர் பக்கம் பேச்சு சென்றது. ரெஜினா ஒவ்வொரு பெண்ணாக கேலி செய்து கொண்டிருந்தாள். அவளது கொண்டை குலுங்க அவள் அதைச் செய்தாள். குதிரை மூஞ்சி, நரி பால், எலிவால் என்றெல்லாம் குழந்தைகளுக்குப் பெயர் வைத்திருந்தாள். அவளது அருவருப்பான வேடிக்கைகளை சரோஜினி ரசித்துக் கொண்டிருந்தாள். மாராப்பு விலகி மார்பு குலுங்க சிரிப்பது காண சகிக்கவில்லை . 'ரெஜி... ரெஜிமா... கொன்னுட்டடி....' ஆராதனைகள் வேறு.
பள்ளிக்கூடங்கள் பலிக்கூடங்கள் ஆகிவிட்டன. நானும் அவர்களது கூட்டத்தில் ஒருத்தியா? எல்லாம் முன் தயாரிக்கப்பட்டவை. ரெடிமேட் கேள்விகள், அவற்றிற்கு நோட்ஸ்களில் ரெடிமேட் பதில்கள், வகுப்பறையில் ஆசிரியர்கள் ஓய்வெடுக்கிறார்கள். வெறும் மனப்பாடம் செய்யும் இயந்திரமாய் (அதுவும் முக்கிய கேள்விகளுக்கான விடைகளை மட்டும்) மாணவர்கள் உருமாற்றம் அடைந்துவிட்டனர். எல்லாம் பொட்டைப் பாடம்.
எல்லா மாணவர்களுக்கும் எண்கள் தரப்பட்டுள்ளன. வகுப்பு, வரிசை எண், தேர்வு எண், அவை பெற்றெடுக்கும் மதிப்பெண்கள், எங்கும் எண்கள். எண்களே பள்ளிகளை ஆள்கின்றன. எல்லா ஆசிரியைகளுமே ஏதாவது ஒரு வகையில் மாணவரின் அறிவை அவமானப்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டேன். அவர்களில் ஒருத்தியா நான்? என் மீதே எனக்கு வெறுப்பு உண்டாயிற்று. ஒரு பெண் , அறிவார்த்தமான ஒரே ஒரு கேள்வியால் என்னை எப்படி யோசிக்க வைத்து விட்டாள்?
'ஒரு கேஸ் இன்னிக்கு பிடிபட்டது... இதை கேட்டியோ....' என்று அங்கலாய்த்தபடி என்னிடம் வந்தாள் சுகுணாமிஸ், மேல்நிலைக்கு கணக்கு நடத்துபவள். விடுதிக் காப்பாள யுவதிகளில் ஒருத்தி. எந்த உற்சாகமும் இன்றி என்ன' என்றேன்.
'வினோதமான கேஸ் .... லெவனத் வீட்டுக்கணக்கு திருத்திக்கிட்டிருந்தப்போ கஷ்டப்பட்டு பிடிச்சேன்.... பாதி பேர் நோட்ல ஒரே கையெழுத்து! அதுவும் ஒரு லாஜிக்சம் முதல்ல காப்பினு நெனச்சேன். அப்புறம் ஒருத்திய பிடிச்சி செமத்தியா குடுத்தேன். உண்மையை கொட்டிட்டா...'
கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தேன். அவள் என்னை காத்திருக்க வைத்தாள். நான் திடுக்கிட வேண்டுமென விரும்புவள் போலிருந்தாள். ''ம்... சொல்லு' என்றேன்.
'நம்பமாட்ட .... ஒரு டென்த் ஸ்டாண்டர்டு படிக்கிற பெண் லெவனத்துக்கு வீட்டுக்கணக்கு போட்டுத்தந்திருக்கு ....''
'டென்த்தா ?' எழுந்து நின்றிருந்தேன்.
'ஆமாம்... கஷ்டப்பட்டு கண்டு பிடிச்சேன்.... நேரா... ஸிஸ்டருட்ட போயிட்டேன்.' எனக்கு ஊர்ஜிதமாகிவிட்டது போலானது. 'என்ன. பண்ணினாங்க அந்தப்பெண்ண....?
'அது ஒரு ஆயி அப்பன் இல்லாத கேஸ்' 'ஆர்பன்ஸ் ஹோமா?'
'சித்தி வீடோ என்னமோ... கார்டியன வரச்சொல்லியிருக்காங்க..... மோஸ்ட்லி டி.சி. யாதான் இருக்கும்.''
நான் எப்படித் தவித்தேன் என்பதை என்னால் இங்கு எழுத முடியாது. பிரின்சிபால் அறைக்கும் ஓய்வறைக்கும் இருப்புக் கொள்ளாமல் நான் அலைந்தேன். பதினொன்றாம் வகுப்பு மாணவியர்க்கு ஒரு டென்த் மாணவி வீட்டுக்கணக்குச் சொல்லித் தருகிறாள் என்றால் அவள் என்ன நம்பமுடியாத பிறவி? இங்கு ஏன் வந்து பிறந்து தொலைந்தாள். அம்மா, அப்பா இல்லாதவளாமே..... கடவுளே எங்கள் குழந்தைகளை ஆசிரியர்களிடமிருந்து காப்பாற்றும்.
அவளது வகுப்பிற்கு நான் போன நேரத்தில் அவளது இடம் காலியாக இருந்தது. விசாரித்தேன் . 'செம்ம அடி மிஸ்' என்று கலங்க அடித்தார்கள். ஏதோ ஆகிப் போயிருந்தேன். எதுவும் நடத்தப் பிடிக்காதவளாய் இருக்கையில் அமரப் போனேன்.
'மே... அய்... கம்..... இன்... மிஸ்...'' ஆயிஷா நின்றிருந்தாள். கலைத்தெரியப்பட்ட கனவு போல, வெள்ளைப்படு - தாவுடன் இரண்டு இசுலாமலிய பெண்கள் உடன் நின்றிருந்தனர். ஒருத்தி எனக்கு முகமன் செய்தாள்.
'நான் ஆயிஷாவோட சித்தி...' 'வாங்க....'
'எப்படி படுத்தறா பார்த்தீங்களா... இவ என்னோட அக்கா பொண்ணு இவப்பொறந்த நேரமே சரியில்ல. இந்த சனியன் வேணும்னு யார் அழுதா தருதல மவ....'
என் கண்முன்னால் ஆயிஷாவை அடிக்க முயன்றாள்.
'கொஞ்சம் பாத்துக்கங்க... புத்தி சொல்லுங்க என் புருசன் கூட இங்க இல்ல .. துபாயில் இருக்காரு... தனியா அவஸ்தைப்படறேன். இது இப்படி இருக்கு படிப்ப நிறுதிடலாம்னா.. சரி இவ்வளவு வருசம் படிச்சது படிச்சாச்சு ஒரு எசெல்சி முடிச்சிடட்டுமேனு பாக்கேன் ...''
அன்று வகுப்பிலிருந்து கிளம்பும் - போது சொன்னேன்.
'ஆயிஷா... ஈவினிங் ஹாஸ்டல்ல வந்து என்னப்பாரு...'
'எஸ். மிஸ்'
ஆயிஷாவோடு நான் மிக நல்ல உறவு வைத்துக் கொண்டேன் என்பதை சொல்ல வேண்டியதில்லை. ஆரம்பத்தில் அவளது வருகை என் சக ஆசிரியைகளுக்கு எரிச்சலை கொடுத்தது உண்மைதான். ஆனால் நாட்போக்கில் சரியாகிப் போனது. அவளிடம் இருந்து எக்கச்சக்கமான கேள்விகள் வந்து கொண்டேயிருந்தன. ஆயிஷாக்கு மட்டுமென்ன? யாரிடமாவது கேள்விகளை கொட்டித் தீர்க்க மாட்டோமா என்று ஏங்கிக் கிடந்தவள்தானே.... நான் கிடைத்ததும் ஒட்டிக்கொண்டு விட்டாள். தினமும் மாலை நான்கு மணியிலிருந்து இருட்டும் வரையில் விடுதியில் என் அறையில் இருக்கத் தொடங்கினாள்.
ஆயிஷாவிடம் எனக்குப் பிடித்தமான இரண்டு அம்சங்கள் இருந்தன. ஒன்று அவளது வேகம். அது அசாதரனமானது. பத்து பன்னிரண்டு பக்கங்கள் படுவேகமாய் படித்துவிடுவாள். இரண்டாவது கேள்வி, கேட்கும் அவளது அறிவுப் பசி புரியாததை புரியும் வரை விட மாட்டாள். நான் அவளோடு பழகிய குறுகிய காலத்திற்குள் இந்த புத்தகத்தில் நான் சேர்ந்திருக்கும் இத்தனை கேள்விகளும் அவளை கேட்க வைத்தது அவளது அறிவுப்பசிதான்.
வெப்பவியல் நடத்தியபோது அவள் கேட்ட கேள்வி அற்புதமானது. 'மிஸ்... மெழுகுவர்த்தி எரியுது. ஒரு கேஸ் அடுப்பும் எரியுது இரண்டுமே நெருப்புதான். மெழுகு தீபத்தில் ஒளி அதிகமாயும் வெப்பம் கம்மியாவும் இருக்கு. ஆனா அடுப்புல ஒளி கம்மியாவும் வெப்பம் அதிகமாயும் இருக்குதே. ஏன் மிஸ்?' (இந்த நூலில் 12 ஆம் பக்கத்தில் இக்கேள்வி உள்ளது) நான் கேட்டுக் கொண்டேன். இந்த கேள்வி கேட்கும் மாபெரும் வித்தையை அவள் எங்கேயிருந்து கற்றாள்? அது அவளது உதிரத்தில் உள்ளதா , வகுப்பறை என்றல்ல. ஒருநாள் நான் எனது ஆடைகளை துவைத்துக் கொண்டிருக்கும் போது கேட்டாள். 'துணி துவைக்கிற சோப் அழுக்கை அகற்றுவதற்கும் குளியல் சோப் அழுக்கை அகற்றுவதற்கும் இடையிலான வித்தியாசம் என்ன?' கடவுளே இந்தப் பெண்.... கேள்விகளால் இந்த பிரபஞ்சத்தை உலுக்கவே பிறந்திருக்கிறாள்.
ஒரு நாள் The most dangerorus man in America என்கிற பெஞ்சமின் பிராங்க்ளினின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை கொண்டு வந்தாள். அதிசயிக்கத்தக்க வகையில் என்னையும் ஒரு புத்தகப்புழுவாக மாற்றிக் கொண்டிருந்தாள். 'மின்னலில் மின்சாரம் உள்ளதை நிரூபித்த பிராங்க்ளின் பட்டம் ஒரு பட்டு கைகுட்டையால் செய்யப்பட்டது மிஸ்' என்றாள். எனக்கு அதுவரை தெரியாது. ஒரு கேள்வியை எழுப்பிக் கொள்வது பிறகு அதற்கொரு விடை தெரியும் வரை ஓயாது தேடுதல் என்கிற ஒரு தேர்ந்த விஞ்ஞானியின் தகுதி ஆயிஷாவிடம் இயல்பிலேயே இருந்தது. - 'மிஸ்... நியூட்டன் அறிவியல் சோதனைகள் நடத்த ஆரம்பிச்சப்போ அவருக்கு வயது பன்னிரண்டு. பிராங்க்ளின் தன் முதல் சோதனையை 40 வயசுலதான் செய்திருக்காரு வயதா பிரச்சனை. ரெண்டு பேரும் விஞ்ஞானிகள்தான்.''
'.......'
'மிஸ்.. இந்த புத்தகத்துல சில பக்கங்கள் நல்லா புரியுது சிலது புரிய மட்டேங்குது.'
'போகப் போகப் புரியும். அது அதுக்கு ஒரு வயசு வேண்டாமா....'
'என்ன மிஸ்... நீங்க... எனக்கு இங்கிலீஷ் தான் பிரச்சனை...'
அதுவும் ஒரு பிரச்சனைதான்' 'ரொம்ப கஷ்டமாயிருக்கு மிஸ்.... நம்ம மொழிலயே வரணும்.''
'யாரு எழுதறாங்க..... சொல்லு. 'நீங்க எழுதலாமே மிஸ்'
'இப்படி புத்தகங்களை திருடிட்டு வரியே.... மாட்டிக்கிட்டா ....'
'நான் தான் படிச்சிட்டு எடுத்த எடத்திலேயே வெச்சிடறேன்...''
'தப்பும்மா '
'சொல்லுங்க மிஸ்..' 'என்ன சொல்லனும்?'
'நீங்க ஏன் தமிழ்ல இதை - யெல்லாம் எழுதக்கூடாது...?'
'பார்க்கலாம்.... அதுக்கெல்லாம் நிறைய விஷயம் தெரியணும்?'
'தெரிஞ்சவரைக்கும் எழுதலாமே'
பிறகு வழக்கமான வேகத்தோடு கேட்டாள். இந்தப் புத்தகத்தின் 32ஆம் பக்கத்தில் உள்ள அந்த கேள்வியை.
'மிஸ் ...... மின்ன லிலிருந்து மண்ணை மின் சாரம் தாக்கும் இல்லையா? மரம் கூட விழுவதுண்டு.... கம்பியிலுள்ள மின்சாரத்திற்கும் அதுக்கும் என்ன வித்தியாசம்,? காற்றில் எப்படி மின்சாரம் பரவுது?
என் ஆயிஷா அப்படிப்பட்ட வளாக இருந்தாள். பழைய எனது ரெக்சின் பையில் அவளது சின்ன ஆய்வுக்கூட பொருட்கள் இருந்தன. ஒரு லென்சுக் கண்ணாடி வட்டவடிவ காந்தம்... மருத்துவரின் ஊசி சிரிஞ்ச ஒன்று, மற்றும் ஒரு பழுதடைந்த டிரான்சிஸ்டர் வானொலி. அதனை சரிசெய்யும் முயற்சியிலேயே பல விடுமுறை நாட்கள் கழிந்தன.
நானோ நிறைய மாறிக் கொண்டிருந்தேன். எவ்வளவு மோசமானவளாக இருந்திருக்கிறேன்? எனது சொந்தத் துறை மீதே எவ்வித அக்கறையும் இல்லாமல் சொரணையற்ற பிண்டமாக ஆறு ஆண்டுகள் வெறுமனே தள்ளியிருக்கிறேன்.
ஆயிஷாவின் உறவில் தான் நான் உணர ஆரம்பித்தேன். எவ்வளவு விஞ்ஞானமற்ற முறையில் நாம் நம் குழந்தைகளுக்கு விஞ்ஞானம் போதிக்கிறோம் என்று. நாம் எங்கே குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தை உணர்ந்து கேள்வி கேட்க அவகாசம் தருகிறோம்? அவர்கள் கேட்கத் தொடங்கும் முன்னரே நாமாக முன் தயாரிக்கப்பட்ட கேள்விகளால் அவர்களை மூழ்கடித்துவிடுகிறோம். அறிவும் வளரு வதில்லை . பள்ளியில் ஆசிரியர்கள் அதிகம் சொல்வது எதை? 'கையகட்டு... வாயை பொத்து.'
விரைவில் புரிந்து கொண்டேன் என் ஆயிஷாவுக்கு நாலுபுற மிருந்தும் பிரச்சனைகள் முளைத்தன. ஆனால் பயித்தியக்காரி. நான் உணரத் - தலைப்படவில்லை அவளை, அவளது அறிவை அது எந்தத் திசையில் செலுத்தும் என்று. ஒருநாள் சட்டென்று கண்ணில் பட்டது. ஆயிஷாவின் பின் காலில் பட்டை பட்டையாக வீக்கம் துடித்துப் போகுமளவு அடிவாங்கியிருந்தாள். இப்போது அவள் என்னிடம் மிகவும் நெருங்கி யிருந்தாள் அவளைத் தொடாமல் உங்களால் பேசவே முடியாது. அவள் மீது அவ்வளவு அன்பூறும்படி அவள் செய்திருந்தாள். கிட்டத்தில் அழைத்து விசாரித்தேன்.
கெமிஸ்ட்ரி மிஸ் அடிச்சாங்க' என்றாள்
'ஏன்?.... ஏன் ஆயிஷா ?'
'பேப்பர் வந்தது. மார்க் சரியா போடல . கேட்டேன்..... சொந்த சரக்குக்கெல்லாம் மார்க்கு கிடையாதாம். நோட்ஸ்ல இருக்கிறது அப்படியே எழுதணுமாம் டென்த்துன்னு மிரட்டுறாங்க.... மிஸ்.... நோட்ஸ்லயே தப்பாயிருந்தா என்ன பண்றதுனுட்டு கேட்டேன் ...'' பேசமுடியவில்லை அவளால் , அழும்போது அவள் குழந்தையாய் இருக்கிறாள்.
முன்பு ஒருமுறை சரோஜினியிடம் வாங்கிக்கொண்டு வந்தாள். இதே நோட்ஸ் பிரச்சனை ..... கடவுளே அவரவர் அறிவை பயன்படுத்த அனுமதியுங்களேன். எப்பேர்ப்பட்ட பெண் . அவளை அடிப்பது என்றால் எப்படி மனசு வருகிறதோ.... ராட்சகிகள்.
தவிர வேறுவித சிக்கல்கள். டியூசன் , கிட்டத்தட்ட எல்லா ஆசிரியைகளுமே வீட்டில் தனியாக டியூசன் நடத்தி வந்தனர். பணம், எல்லாம் அது படுத்தும் பாடு. போட்டோ போட்டி சண்டை. வீட்டிற்கு படிக்க வருவோர்க்காக விசேட சலுகை , சட்டங்கள், வகுப்பில் ராஜமரியாதை.... வினாத் தாட்களை முன்னர் அறியும் உரிமை. எவ்வளவு குமட்டவைப்பது அது. வெட்டகமில்லாமல் இதை அவர்கள் செய்தே வருகிறார்கள். வருமானவரியில் சேராத வருமானம் யார்தான் விடுகிறார்கள்?
ஆயிஷா யாரிடமும் டியூசன் படிக்காதவள் என்பதால் பழிவாங்கப் பட்டாள். வகுப்பிலும் கேள்விகள் கேட்டு குழப்பி விடுபவளாக இருக்கிறாள் அல்லவா. தொழிலை கடினமாக ஆக்குபவளை யார்தான் விரும்புவார்கள். விரைவில் எனது போராளி தினமும் அடி, உதை வாங்கத் தொடங்கினாள்.
வரலாற்றுப் பாடவேளையில் கூட ஜெர்சி மிஸ் என்ன செய்தாள்.
'அசோகரை புத்த மதத்துக்கு மாற்றியது யார் மிஸ்.....?
'புத்த பிட்சு ஒருத்தர்?'
'இல்ல, அவர் பெயர்?'
........
அவரது பெயர் உபகுப்தர்... மிஸ்'
'தெரிஞ்சு வெச்சுகிட்டு டெஸ்ட் பண்றயா... வாடி இங்க..'
ஒரு காலில் நிற்கவைத்து உதைத்திருக்கிறாள். இப்படி ஆயிஷா முன் எல்லா ஆசிரியைகளுமே தனது பிம்புப் பிரயத்தனத்தால் அறிவை நிலை நாட்டிடத் தொடங்கிவிட்டார்கள். 'டீச்சருங்க அடிச்சா வலிக்காம இருக்க ஏதாவது மருந்து இருக்கா,' என்று கேட்கிறாள் ஆயிஷா .
'அடி அசட்டுப் பெண்ணே' என்று கட்டிக்கொண்டே என்னால் அப்போது எந்த புதிரையும் உணரமுடியவில்லை . எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்து விட்டேன்.
ஒரு இரவு அவள் அவசரமாக வீட்டுக்கு கிளம்பியபோது தனது சிறிய குறிப்பு நோட்டை விட்டுச் சென்றுவிட்டாள். அன்றைக்குத்தான் என் ஆயிஷாவின் இன்னொரு பக்கம் தெரிய வந்தது. நூற்றுக்காணக்கான கேள்விகளின் தேவையை விட இந்த என் ஆயிஷா வித்தியாசமானவள். முதலில் அந்த நோட்டு என் கண்களில் பட்ட போது அதை எடுத்து மேஜையில் வைத்து விட்டு வழக்கமான விடை திருத்தும் வேளையில் இறக்கிவிட்டேன். பிறகு ஏதோ ஒரு உந்துதலின் பேரில் அதை எடுத்துப் புரட்டினேன். முதல் பக்கம், இரண்டு, மூன்று, நாலாம் பக்கத்தில் எனக்கு முதல் அதிர்ச்சி ஒரு பக்கம் முழுதும் ஆயிஷா நூற்றுக்கணக்கான முறை என் பெயரை எழுதிவைத்திருந்தாள். நீண்ட நேரம் அந்தப்பக்கத்தை நோக்கிய எனக்கு கண்ணீர் முட்டியது. பிறகு சில பக்கங்கள் வகுப்பில் எழுதப்பட்ட ஆங்கிலப்பாட்டு மூன்று முறை பின் அந்தப்பக்கம் என்னை மேலும் அதிர்ச்சியடைய வைத்து கிட்டத்தட்ட மூர்ச்சையாகி விழவைத்து அந்தப்பக்கம்.
என் பெயரை எழுதியிருந்த ஆயிஷா அதற்கு கீழே என் தாய்; என் முதல் ஆசிரியை என் முதல் உயிர்' என்று ரத்தத்தினால் எழுதியிருந் தாள். ஆம் அது ரத்தம்தான் அய்யோ... இது என்ன பெண்ணே .. உனக்கு என்ன நான் செய்து விட்டேன். உனது கேள்விகள் சிலவற்றை காது கொடுத்து கேட்டதைத் தவிர, அதற்கேவா இத்தனை அன்பைப் பொழிகிறாய்? அம்மா... நீ மாபெரும் மனுஷி , என்னுள்ளே யாரை தேடுகிறாய்? நீ பார்க்காமல் போன அப்பா, அம்மாவையா? அல்லது யாரையடி என் உயிரே. நீ இல்லாது போயிருந்தால் நான் மட்டும் யாரடி? ஒரு எந்திரத்தைவிட கேவலமான ஆசிரியையாகவே செத்துப்போயிக் கிடந்த என்னை மீட்டெடுத்தவளல்லவா நீ, என் பொக்கிஷமே இத்தனை நாட்கள் எங்கேயடி இருந்தாய்? எனக்கு உடல் சிலிர்த்துப் போனது, நான் சொல்லிக் கொண்டேன். அவளுக்கு, என் உயிரான ஆயிஷாவுக்கு எப்படியாவது நன்றியாக எதையாவது செய்ய வேண்டும். உன்னை எப்படி ஆக்குகிறேன் பாரடி...? கடவுளே .. அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது.
சம்பவத்திற்கு முதல் நாள் வகுப்பிலும் சர் ஹம்ப்ரி டேவியை பற்றி சுருக்கமாய் சிலவற்றை சென்னேன். அறுவை சிகிச்சையின் போது உடலை மரத்து போக வைக்கிற நைட்ரஸ் ஆக்சைடு வாயுவை அவர் கண்டு பிடித்தது கண்டுபிடித்தது குறித்து பாடம் நடத்தினேன்.
'நைட்ரஸ் ஆக்சைடு தண்ணீரில் கரையுமா... மிஸ்'
'தண்ணீல மட்டுமில்ல அது எத்தனாலிலும் சல்பியூரிக் அமிலத்தி - லும் கூட கரையும்.''
இப்படித்தான் நான் சோரம் போனது. எப்படி மறப்பது நான். அன்று பள்ளியில் குழந்தைகள் தினம் மாவட்ட ஆட்சித் தலைவர் வருவதாய் இருந்தது. மதியம் விழா இருந்த மையால் காலையில் பள்ளி விடுமுறை நாட்களில் வீட்டில் எவ்வளவு தான் வேலைகள் என்றாலும் பத்து பதினோரு மணிக்குள் என் ஆயிஷா ஓடோடி வந்துவிடுவாள். அன்றைக்கு என்று ஆளைக் காணவில்லை.
எனது சொந்த வேலைகளில் மும்முரமாக இருந்தபோது உச்சி வெயிலில் ஒரு மாணவி வந்து அழைத்தாள். ஆயிஷா அனுப்பியதாகவும் வேதியியல் ஆய்வுக் கூடத்திற்கு பின் புறம் அவள் இருப்பதாகவும் கூறினாள்.
'ஏன் அவ இங்க வரவேண்டியது. தானே'
'தெரியல மிஸ்'
அவளை அனுப்பிவிட்டு கிளம்பினேன். மனசுக்குள் ஏதோ எங்கோ பிசகிப் போனதை உணர்ந்தேன். கடவுளே.. இதை எழுதும் தருணத்தில் எனக்கு எப்படி உடல் நடுங்குகிறது.
லேசான களைப்பில் இருப்பவளைப் போலிருந்தாள் ஆயிஷா .
இன்னிக்கி... எக்ஸ்பரிமண்ட் சக்சஸ் மிஸ்'
'என்ன... என்ன எக்ஸ்பரிமண்ட்?'
இந்தாங்க ஸ்கேல்.. என்னை அடியுங்க பாப்போம்.''
'ஏன்... ஆயிஷா... என்ன சொல்றே நீ....?
'மருந்து மிஸ்... மரத்துப்போற மருந்து ....
இனிமே யாரு அடிச்சாலும் எனக்கு வலிக்காது மிஸ் ..... எப்படி வேணும்னாலும் அடிச்சிக்கட்டும்...''
'ஆயிஷா .. உனக்கென்ன பயித்தியமா'
'லேபிலிருந்து நைட்ரஸ் எத்தனால் கரைசல் கெடச்சது மிஸ்... முதல்ல இந்த தவளைக்குப் போட்டேன் ஊசி. இரண்டு மணி நேரம் மல்லாக்கப் போட்டாலும் உணர்ச்சி இல்ல. அப்போ மரத்துப் போச்சினு அர்த்தம்...'
'அப்புறம் அதே மருந்தை எனக்கு ஊசி போட்டுகிட்டேன் .... எப்படி என் அய்..டியா'
'ஏம்மா... இப்படியெல்லாம் பண்ற'
'பாருங்க இந்த தவளைதான்'
நான் பார்த்த இடத்தில் இருந்த வாளித் தண்ணீரில் ஒரு தவளை தலை கீழாய் மிதந்தது.
'ஆயிஷா... நோ'
'அய்யய்யோ ... தவளை செத்துப் போச்சு .... மிஸ்'
கடவுளே அதற்கு மேல் எழுத என்ன இருக்கிறது. வேதியியல் ஆய்வுக் கூடத்தின் பின்னால் ஆயிஷா விழுந்து கிடந்தாள். ஒரு பூமாலை மாதிரி விழுந்து கிடந்தாள். சின்ன கூட்டம் கூடியது. பியூன் கோவிந்தன் ஆட்டோ கொண்டு வர ஓடினான் . சிஸ்டருக்கு சொல்லப்பட்டது. அவளை என் உயிரு க்கு உயிரான ஆயிஷாவை சுமந்து கொண்டு நான் சாலைக்கு ஓடினேன். என் கண்ணான அவளை எப்படியாவது பிழைக்க வைத்துவிட வேண்டுமெனத் தவித்தேன்.
ஆனால் ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு போவதற்குள் என் ஆயிஷா எங்களை பிரிந்து விட்டாள். எப்பேர்பட்ட ஆயிஷா , நான் தாங்கிக்கொள்ள முடியாதவளாய் குழந்தை மாதிரி அவள் மீது புரண்டு கதறி அழுதேன். இனி என்ன உங்களுக்கு திருப்திதானே மிருகங்களே.... என் ஆயிஷாவை ஒப்பற்ற அந்த அறிவுக் கொழுந்தை கொன்று தீர்த்து விட்டீர்கள். போங்கள். இனி உங்கள் வகுப்புக்கள் எளிமையானவை. அறிவுக்கு அங்கு வேலை இல்லை.
ஆயிஷா என் கண்ணே .... என் கண்களை திறந்துவிட்டு விட்டு ஏன் அவ்வளவு சீக்கிரம் என்னைவிட்டு ஓடிப்போனாய், பார்..... உனக்காக நீ கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில்களைத் தேடித்தேடி எழுதி வைத்திருக்கிறேன். நீ சொன்னது போல தமிழில் தான் எழுதியிருக்கிறேன்.
உன்மாதிரி எத்தனை ஆயிஷாக்களை நாங்கள் இழந்திருப்போம். நீ இறந்து போனாய். வயசுக்கு வந்த நாளோடு பள்ளிக்கூடம் விட்டு ஓடியவர்கள் ! எங்கேயோ ஒரு ஊரில் யாரோ ஒருவனுக்காக துவைத்து, சமைத்து பிள்ளை பெற்றுப் போடுபவர்கள்; ஆணின் பாலியல் பசிக்காக தன்னை விற்பவர்கள்; முப்பது ரூபாய் சம்பளத்திற்காக வீடு பெருக்கி சாணி மெழுகுபவர்கள்; வயல் கூலிகள்; கட்டிடங்களுக்கு கல் உடைக்கும் பெண்கள் அவர்களில் எத்தனை ஆயிஷாக்கள் உள்ளனரோ . தன் விஞ்ஞானக் கனவுகளை நாள்தோறும் அடுப்பு நெருப்பில் போட்டு வேக வைத்துவிடும் அந்த நூற்றுக்கணக்கான ஆயிஷாக்களுக்கு இந்த புத்தகத்தை கண்ணீரோடு சமர்ப்பிக்கிறேன்.
இந்த விஞ்ஞான நூலை வாசிப்பவர்கள் ஒரு பத்துப் பெண்களுக் காவது இரவல் கொடுப்பார்களா?
அவர்களில் ஒரு ஆயிஷாவாவது இருப்பாளா? என் பொக்கிஷமே ஆயிஷா... நீ கேட்ட கேள்விகளிலேயே என்னை மிகவும் பாதித்த ஒரு கேள்வி உண்டு. அதை வாசகர் முன் வைத்து என் முன்னுரையை முடிப்பதே பொருத்தமாக இருக்கும்.
'மிஸ் கரோலின் ஏர்ஷல் போலவோ, மேரிகியூரி போலவோ நம்ம நாட்டுல பெயர் சொல்றா மாதிரி ஒரு பெண் கூட விஞ்ஞானியா வரமுடியலையே ஏன்?'
இக்கேள்விக்குரிய பதிலை நான் சொல்ல வேண்டியதில்லை. தனது சொந்த வீடுகளின் இருண்ட சமைலறையில் போய் அவர்கள் அதை தேடட்டும்.
-----
இரா.நடராசன் : 1970களின் நடுப்பகுதியில் இருந்து கவிதை, சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என பல்வேறு களங்களிலும் தீவிரமாக இயங்கி வருபவர். தமிழ்நாடு கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முதல்வராகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.
இரா.நடராஜன் ஒரு நேர்காணலின் பொழுது ஆயிஷா கதை குறித்து அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
நானும் ஓர் ஆசிரியன் , அதுவும் தலைமை ஆசிரியன் . இந்த கல்விமுறையில் சிக்கிக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல், தான் செய்கின்ற பாவங்களுக்குப் பிராயச்சித்தம் தேடுகின்ற ஓர் ஆசிரியனாக இருந்துகொண்டுதான் , பதட்டத்தைத் தாங்கமுடியாமல் நான் ஆயிஷாவை எழுதினேன். அதை ஒரு பிரமாண்டமான நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை போல் வடிவமைத்திருந்தேன். அதை பத்திரிகைகளுக்கு அனுப்பிய போது, இந்த உத்திமுறையை புரிந்து கொள்ள முடியாமல் கிட்டத்தட்ட ஆறு ஏழு பத்திரிகைகள் திருப்பி அனுப்பின. கணையாழி'யில் குறுநாவல் போட்டி நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டபோது, அதற்கு அனுப்பினேன். சற்று நீளமான கதை என்றாலும் அதை வெளியிட்டு, முதல் பரிசு கொடுத்து கணையாழி' என்னைக் கௌரவித்த போது, அந்தக் கதையையும் புரிந்துகொள்கிற, உள்வாங்கிக் கொள்கிற மனிதர்கள் இருக்கிறார்கள் என்கிற மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது. அதன் பிறகு ஆயிஷா ஏற்படுத்திய அலை இருக்கிறதே அதிலே எனக்குப் பங்கில்லை. அது ஆயிஷா செய்தது. ஆயிஷாவின் வாசகர்கள் செய்தது. ஆயிஷாவின் வாசகர்கள் செய்தது. ஆயிஷாவின் வாசகர்களாக இருந்து, ஆயிஷாவை எடுத்துக் கொண்டு போகிற ஒவ்வொருவரும் இந்த கல்விமுறைக்கு எதிரான மிகப்பெரிய போராளியாக, இந்த உலகத்தின் நியாயமான கல்விமுறையைக் கொண்டுவர வேண்டும் என்பதற்கான குரலை எழுப்பக்கூடிய மாமனிதர்களாக இருக்கிறார்கள். ஆயிஷா ஒரு கதை அல்ல, அது ஓர் இயக்கம். அந்த வகையில் அந்த வேலை முடிந்துவிடவில்லை . இப்போதுதான் தொடங்கி உள்ளது. 'ஆயிஷா' இன்றைய கல்விச்சூழலில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது ....?
பல பள்ளிக்கூடங்களில் ஆயிஷாவை முன்வைத்து, ஆசிரியர்களின் முரட்டுத்தனம் குறைக்கப்பட்டுள்ளது மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உட்பட மூன்று பல்கலைக்கழகங்களில் ஆயிஷாபாடமாக வைக்கப்பட்ட டுள்ளது. அதைப் படித்த மாணவிகள் ஆசிரியான பிறகு, நநான் ஆயிஷாவைப் படித்ததினால் தான் ஆசிரியை ஆனேன். இப்போது ஒரு முன்னு. தாரண ஆசிரியராக திகழ்ந்துகொண் - டிருக்கிறேன். பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளை அழைத்து, மாலை நேர இலவச வகுப்புகளை நடத்துகி றேன். என்றெல்லாம் அவர்கள் எழுதும் போது, என்னில் தான் பிறந்து அவர்கள் ஆசிரியர் தொழிலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணிப்பார்த்து நான் பூரிப்படை கிறேன். ஆயிஷாவைப் படித்துவிட்டு மாணவர்கள் மத்தியிலிருந்து வந்த பல கடிதங்களின் மூலமாகத்தான், அறிவியல் நூல்களை எழுதியாக வேண்டும் என்கிற கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. தமிழில் இதுவரை நான் 23 அறிவியல் நூல்களை எழுதியிருக்கிறேன். அவை அனைத்துக்குமான மூலம் ஆயிஷாதான்.