-ரூபன் சிவராஜா-
இந்த இரவும்
இந்தக் கனவும்
இந்தக் கவிதையும்
மனதின் தீராப்பக்கங்களை
நிரப்புகின்றன.
இரவுக்கு உருவம் உண்டு
இரவுக்கு உயிர் உண்டு
இரவுக்கு பசி தாகமும் உண்டு
இரவின் உயிராய் கனவுகள்
இரவின் பசிக்கு சில தானியங்களாய்
கவிதைகள்.
மலைகளின் முகட்டிலிருந்து
வழிகின்ற துளிகளாய்
இரவின் முலைக் காம்புகளில்
சுரக்கின்ற கவிதைகள்.
மலைகளுக்கு அப்பால்
எழுகின்ற ஓசையில்
விடியலுக்குப் பிந்திய கணங்களின்
முன்னறிவிப்பு நிகழ்ந்துகொண்டிருக்கிறது