என்னைப் பேசவிடுங்கள்
உங்களின் கூக்குரல்களால்
எனது காயங்கள் ஆழமாகக் கிழிக்கப்படுகின்றன.
எனது குரல் உங்களின் பாதச்சுவடுகளின் ஒலியில்
அமுங்கிச் சிதைகிறது
வேண்டாம்.
நான் என்னைப் போலவே இருக்க விரும்புகின்றேன்
எப்போதும்
வானத்திலிருந்து நட்சத்திரங்கள்
சிதறி உடைகின்றன
நீங்கள் கூச்சலிடுகிறீர்கள்
மண்ணிலிருந்து விதைகள் பீறி;டுகின்றன.
நீங்கள் மீண்டும் மீண்டும் சந்தம் கொள்கிறீர்கள்
உங்களுக்காக நான் வெட்கித் தலைகுனிகிறேன்
சில கணங்களோடும்
யாருக்காவது அனுமதியளியுங்கள்
அவர்களின் தொண்டைக் குழியிலிருந்து அல்லது
மனசின் ஆழத்திலிருந்து எழும் சில கேள்விகளை
அழுத்திக் கேட்கவும் பேசித் தீர்க்கவும்
எனது உடைந்த குரலில்
நானும் பாட விரும்புகிறேன்
அன்பு நிறைந்த துயரப் பாடல்களை
சந்திரபோஸ் சுதாகர் ( 1975 -2007)
மூலம்:- ஆசிரியம்